மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 220 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றுள் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது. இதன்பின்பு நடைபெற இருந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டம் மழைக்காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் ஆட்டம் தற்போது கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி பேட்டிங்கில் களம்கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்-சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். தொடரை சமனில் முடிக்க இந்தியா போராடும் என்று எதிர்பார்க்கையில், கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஷிகர் தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயருடன் பந்த் இணைந்தார். ஆனால், பந்த் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்பின்பு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வாஷிங்டன் சுந்தர் மட்டும் அரைசதம் விளாசினார். அவர் 64 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
மொத்தத்தில், நியூசிலாந்து அணியின் கிடுக்குப்பிடி பந்துவீச்சால் இந்திய அணி 47.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
சந்திரமுகியாக மாறப்போகும் கங்கனா ரணாவத்; இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்