ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:
இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாரும் வெல்லவில்லை. கிரிக்கெட்தான் வென்றது. இந்த போட்டி அபாரமாக இருந்தது. என்னைப் பொருத்த வரை இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடியது. வெற்றி பெற்ற அணி அதிக மகிழ்ச்சியடையும். ஆனால் தோல்வி பெற்ற அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விளையாட்டு.
இவ்வாறாக கபில்தேவ் தெரிவித்துள்ளார்.