கடந்த 7-ம் தேதி நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது, அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்பனை செய்துவிட்டார்கள் என்றும், இருவரும் தாங்களாகவே ரூ.270 கோடி மதிப்புள்ள உயில் ஒன்றைத் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிவாஜி கணேசனின் சொத்துக்களின் விவரங்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின்படி, சாந்தி தியேட்டர், மணப்பாக்கம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள 43 ஏக்கர் நிலங்கள், ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள், ஆபரணங்கள் ஆகியவற்றில் சிவாஜி கணேசனின் மகள்கள் பங்கு கோரியுள்ளனர்.
சாந்தி தியேட்டர்
அக்டோபர் 2021-ம் ஆண்டு சாந்தி திரையரங்குகளில் தங்கள் பெற்றோர் வைத்திருந்த ரூ.82 கோடி மதிப்புள்ள பங்குகள் பிரபு மற்றும் ராம்குமாருக்கு மாற்றப்பட்டது குறித்து சாந்தி, ராஜ்வி ஆகியோர் கண்டுபிடித்ததாக தகவல்கள் வந்துள்ளது.
சாந்தி திரையரங்கின் மதிப்பு : ரூ.82 கோடி
மகள்களுக்கான பங்கின் மதிப்பு : ரூ.41 கோடி
மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம்
43 ஏக்கர் நிலங்களை சிவாஜி கணேசன் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர் பெயரிலும் “கூட்டுக் குடும்ப ஆதரவின்றி சொந்த வருமானத்தில் வாங்கியுள்ளார்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
43 ஏக்கரின் சொத்தின் மொத்த மதிப்பு : ரூ.90 கோடி
மகள்களுக்கான பங்கின் மதிப்பு : ரூ.45 கோடி
ராயப்பேட்டை வீடுகள்
17,122 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ராயப்பேட்டையில் உள்ளது. இந்த வீடுகள் சிவாஜி கணேசனால் வாங்கப்பட்டது. இவற்றுள் ஒரு வீட்டில் மகள்கள் வசித்து வருகின்றனர்.
மற்ற மூன்று வீடுகளுக்கும் குத்தகைதாரர்களிடம் இருந்து வாடகை பெறப்படுகிறது. சாந்தி, ராஜ்வி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்களுக்குச் சொந்தமான வாடகைப் பங்கை வழங்காமல் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரணங்கள்
சிவாஜி கணேசன் மற்றும் அவரது துணைவியார் இருவரும் இறந்த பிறகு நகைகள் மற்றும் பாத்திரங்களை பிரபு மற்றும் ராம்குமார் எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 1000 சவரன் வைரம் பதித்த தங்க ஆபரணங்கள் மற்றும் 500 கிலோ வெள்ளி பாத்திரங்களும் ஆகியவைகள் அடங்குவதாக தெரிகிறது.
சகோதரிகளுக்கு தெரியாமல் சொத்தை விற்றாரா நடிகர் பிரபு?