கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான பசவராஜ் பொம்மையின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அம்மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்பிலும் களமிறங்கும்.
தற்போது மக்களை கவர காங்கிரஸ் கட்சி பேருந்து யாத்திரை நடத்தி வருகிறது. அதே சமயம் ஆளும் பாஜக மற்றும் ஜனதா தளம் கட்சிகள் ஜனசங்கல்ப யாத்திரை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பாஜக கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமனம் செய்துள்ளது.
தேர்தல் நெருங்க உள்ளதால், பாஜகவும் காங்கிரஸும் பல திட்டங்களையும் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவலி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராமலிங்கா ரெட்டி ஆகியோர் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் தங்களது புகைப்படம் மற்றும் சின்னம் ஒட்டிய குக்கர்களை பரிசுகளாக வழங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்பாகவே கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்; நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்