Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஷாக் கொடுத்த செந்தில் பாலாஜி- உயரும் மின் கட்டணம்

    ஷாக் கொடுத்த செந்தில் பாலாஜி- உயரும் மின் கட்டணம்

    தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது: 

    தமிழகத்தில் மின்சாரம் 100 யூனிட் வரை தொடர்ந்து விலை இல்லாமல் வழங்கப்படும். வீட்டு மின் நுகர்வோர் நிலைக் கட்டணமாக இரு மாதங்களுக்கு  ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்தி வருகிறார்கள். இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. 

    தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இதற்கான வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 2.37 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள். 

    குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 

    • இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு மாத மின் கட்டணம் செலுத்தும்போது ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும். 
    • இரு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தும்போது ஒரு மாதத்துக்கு ரூ.72.50 (2 மாதங்களுக்கு ரூ.155) மற்றும் 400 யூனிட் வரை பயன்படுத்தும்போது ஒரு மாதத்துக்கு ரூ.147.50 (2 மாதங்களுக்கு ரூ.295) உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
    • மேலும் 500 யூனிட் வரை பயன்படுத்தும்போது ஒரு மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாக செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
    • இரு மாதங்களுக்கு 600 யூனிட் வரை பயன்படுத்தும்போது மாதத்துக்கு ரூ.155 (2 மாதங்களுக்கு ரூ.310) ஆகவும், 700 யூனிட் வரை பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.275 (2 மாதங்களுக்கு ரூ.550) ஆகவும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 
    • இரு மாதங்களுக்கு 800 யூனிட் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.395 (2 மாதங்களுக்கு ரூ.790) ஆகவும், 900 யூனிட் வரை பயன்பாட்டுக்கு ரூ.565 (2 மாதங்களுக்கு ரூ.1,130) ஆகவும் மின் கட்டணம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    ஒரே மின் கட்டணம்: 

    வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட் வரை பயன்படுத்தும்போது இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்படுகிறது. 

    அதே போல், 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாக செலுத்த வேண்டும். 

    இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    நூலகங்களுக்கு புதிய கட்டணமுறை: 

    ஊரகம் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணம் ஒரு மாதத்துக்கு ரூ.60 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. 

    வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தை 30 சதவிகிதம் குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தொழில் துறை: 

    • சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட உள்ளது. 
    • வணிக மின் நுகர்வோருகளுக்கு மாதத்துக்கு ரூ.50 ஆகவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1 ஆகவும் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
    • விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்தப்பட உள்ளது. 
    • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 40 காசுகள் உயர்த்தபட உள்ளது. 
    • ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
    • ஒரு வீட்டில் கூடுதலாக மின் இணைப்பு இருப்பின், ஒவ்வொரு கூடுதல் இணைப்புகளுக்கும் ஒரு மாதத்துக்கு ரூ.225 வசூலிக்கப்பட உள்ளது.
      அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான விளக்குகள், மின் தூக்கி, நீர் வழங்கல் போன்றவைக்கு தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இது தற்போது பொது சேவை பிரிவில் இருக்கிறது.

    இணைய வழி கட்டாயம்: 

    வீட்டு மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் இருப்பின்  இணையதளம் மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும்.

    மருத்துவர்கள், பொறியாளர்கள், உள் அமைப்பு அலங்காரிப்பாளர்கள், கணக்காயர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பணிகளை செய்வோர், தங்களது தொழில்முறை பணிகளுக்கு வீட்டில் 200 சதுர அடி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 

    உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு கருவிகள் போன்ற அமைப்புகளுக்கு வணிகப் பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. இவை தனி பொது சேவை பிரிவாக மாற்றப்படும். 

    தரவு மையங்கள் தொழிற்சாலைகளுக்கான மின் விகிதப்பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    மின் மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம்: 

    வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள நுகர்வோர்கள் மின் மானியத்தை தாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கலாம். இதற்கான திட்டத்தை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

    வீட்டு நுகர்வோர்கள் தங்களது மின்சார வாகனங்களை வீட்டிலேயே மின்னேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு வீட்டு மின்கட்டணத்துக்கான தொகையே வசூலிக்கப்படும். 

    அதே போல், வணிக நுகர்வோர்களுக்கு அவர்களுக்கான கட்டணத் தொகை விகிதத்திலேயே வாகனங்களை மின்னேற்றம் செய்துக் கொள்ளலாம். மின் வாகனங்களை ஊக்குவிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    மாணவியின் உடலில் பல இடங்களில் காயம்- முதல் கூராய்வில் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....