தேசிய கல்விக் கொள்கை என்பது தொடக்க மற்றும் உயர் கல்வியில் இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை என்பது அறிவின் ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்பதே இந்தக் கல்விக் கொள்கையின் இலக்கு என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற அசோசேம் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:
தொடக்க கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்க்க அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேலும், கல்வி இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து பயில உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை என்பது தொடக்க மற்றும் உயர் கல்வியில் இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும். ஒவ்வொரு தனிமனிதரையும் கல்வி மூலம் அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதும், அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்பதும்தான் இதன் இலக்கு. அறிவுசார்ந்த பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உயரும்.
சர்வதேச அளவில் இந்தியா பல துறைகளில் முதன்மையான இடத்தைப் பெற கல்வித் துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. சர்வதேச சமூகத்துக்குக் தலைமை வகிக்கும் வகையில் இந்தியாவை உயர்த்தும் பாதையில் புதிய கல்விக் கொள்கை வழி நடத்திச் செல்லும்.
இவ்வாறாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.