‘விடியா திமுக அரசை விழித்தெழவைக்கும் அறப்போரில் அஇஅதிமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, இன்று (ஆகஸ்ட் 30) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.
விடியா திமுக ஆட்சியில், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, சிறையில் உள்ள ஒரு சில கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை, கைதிகளை திருத்தப் போராடும் நேர்மையான காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. மாண்புமிகு அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்த தமிழகம், இன்று அழிவுப் பாதைக்கே சென்றுவிட்டது.
மக்களைக் காக்க திறமையில்லாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்க தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழவேண்டும். இல்லையென்றால், விடியா திமுக அரசை விழித்தெழவைக்கும் அறப்போரில் அஇஅதிமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.