‘வேட்டி-சேலைகளை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளைக் களைந்து, குறித்த காலத்தில் வழங்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பையும், உடன் ரூ.1000 ரொக்கமும் அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படும் வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்க, பல அரசியல் அமைப்புகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விரைவில் அளிக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘வேட்டி-சேலைகளை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளைக் களைந்து, குறித்த காலத்தில் வழங்க வேண்டும்’ என கூறி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வந்ததாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது;
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி இந்த “கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்” ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம்தான் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர்.
இதனால், 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதன் காரணமாக, வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ‘2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்’ என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.