இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது என்று திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் பேசி புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஹிந்தி மொழியை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ‛ஹிந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஹிந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள். யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஹிந்தி மொழி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு கூட்டத்தில் திமுக எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
வட மாநிலங்களில் பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வளர்ச்சியடையாத மாநிலங்களில் மட்டுமே இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு, மேற்கு வங்க, ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தாய் மொழி இந்தி கிடையாது என்று கூறி இருக்கிறார்.
மேலும், “இந்தி நம்மை சூத்திரர்களாக மாற்றும். இந்தி நமக்கு நல்லதல்ல.” என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஏப்ரலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுதில்லியில் நடந்த பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில், இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்று கூறி இருந்தார்.
இதற்கு தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அதே போல் சமீபத்தில் இந்தி மொழி குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளம்பி வரும் நிலையில் , திமுக எம்.பி பேசியுள்ள கருத்து தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை; ஏற்றுக்கொள்ளாத இந்தியா!