திமுக-வில் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர் என்பதால் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களாக கனிமொழி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்வாகியிருக்கின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மீண்டும் பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம்! வைரல் ஆனதால் காவல்துறை அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், சென்னையில் நேற்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிகவும் கடினமான விஷயம்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயம், இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் எனப் பலரும் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.