பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் பேருந்து நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகளை 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புறக்கணிப்படுவதாக போக்குவரத்து துறையிடம் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். பல கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் கூட பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி நடத்துநர்கள் வாங்க மறுத்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து நடத்துநர்கள், மண்டல கிளை உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாநகர பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு நடத்துநர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள நடத்துநர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட நடத்துநர்களின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி, அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை…