பாஜக சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மிரட்டும் விதமாக பேசிய கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் பேரணியாக சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் ராணுவ அதிகாரியான கர்னல் பாண்டியன் என்பவர் தங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும்; துப்பாக்கியால் சுடவும் தெரியும் என மிரட்டும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் தமிழக அரசை எச்சரிக்கிறேன். எங்களை அந்த நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம்” என தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடி; சுட்டுப்பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!