சித்திரை திருவிழாவின் போது பாலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி ரூபாய் 18 லட்சம் இழப்பீடு கோரி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வன்னியர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து சித்திரை திருவிழாவை நடத்தியது.
இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியினைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரின் அனுமதியை மீறி அங்குள்ள பகுதிகளை சேதப்படுத்தியதாக, பாமக நிறுவனர் ராமதாசு உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களில் பாமகவினர் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இதில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி-மைலம் சாலையில் உள்ள பாலம் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர், ரூ.18 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அப்போதைய பாமக தலைவர் ஜிகே மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 12) விசாரித்த நீதிபதி தண்டபாணி, இழப்பீடு செலுத்தக் கோரி பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை எனத் தெரிவித்து தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் 70% பணியிடங்கள் காலியாக இருந்தால்… எப்படி கல்வித் தரம் உயரும்? ராமதாஸ் கேள்வி