போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளைத் தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (ஆகஸ்ட் 3) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
சுமார் 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஊதிய ஒப்பந்தத்தில் தற்போது வரை தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.
போக்குவரத்துக் கழகங்களில் மாறுபட்ட விடுமுறைகள், தண்டனைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, போக்குவரத்துக் கழகங்களில் மாறுபட்ட விடுமுறைகள், தண்டனைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளைத் தவிர்க்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இக்குழுவில் சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால், தயிர், நெய் வரிசையில் குடிநீர் – ஆவின் நிறுவனத்தின் திட்டம் என்ன?