திருப்பூரில் வட மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் திலகர் நகரில் பனியன் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் குறைவான அளவில் தமிழ்நாட்டினரும், அதிகளவில் வட மாநிலத்தவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் கடந்த 14-ஆம் தேதி மாலை தேநீர் இடைவெளையின்போது வெளியே வந்தனர். அப்போது, அங்கிருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் இவர்கள் புகைப்படித்துள்ளனர்.
அந்நேரத்தில், தமிழக இளைஞர்கள் 4 பேர் மதுபோதையில் அங்கு வந்ததாகவும், வடமாநில இளைஞர் ஒருவர் தங்கள் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி தமிழக இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, அந்த வடமாநில தொழிலாளியை தமிழக இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதைக்கண்ட மற்ற வடமாநில தொழிலாளர்கள் 4 தமிழக இளைஞர்களையும் துரத்தி துரத்தி அடித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, அங்கு போலீசார் விரைந்தனர். இதையடுத்து, தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதேபோல் போலீசார் வருவதை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசார் இதுகுறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை.
இருப்பினும், நடைபெற்ற சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் படம்; வெளியான மோஷன் போஸ்டர்!