சென்னை: மாட்டிறைச்சி தொடர்பான ட்விட்டர் பதிவில், தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை பதில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் மாட்டிறைச்சி உணவை புகைப்படம் எடுத்து மாட்டு கறி என ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார். அவரின் பதிவுக்கு ‘தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்’ என்று சென்னை மாநகர காவல்துறை பதில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை அந்த பதிவை நீக்கியதோடு, இந்தப் பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வு குறித்து காவல்துறை குறிப்பிட்டுள்ளதாவது :
“தாங்கள் பதிவிட்ட ட்விட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீட்வீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக இந்த பதிவு செய்யப்பட்டது.
ஆனால், தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதுக்கு நாங்கள் வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல.” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.