சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன்கள் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன்கள் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்பில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு, ஒரு மாதத்தில் அதிகபட்சம் பயணம் செய்த முதல் பத்து பயணிகளுக்கு 2000 ருபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன், 30 நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்ய மெட்ரோ பயண அட்டை ( ரூ2500 மற்றும் ரூ50 வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-தேதி வரை பயணித்த பயணிகளுக்கான மாதாந்திர குலுக்கல் நிகழ்வு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில், மக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்படும் 30 நபர்களுக்கு விரைவில் பரிசு பொருட்களை அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும். அடுத்த மாதத்திற்கான குலுக்கல் செப்டம்பர் மாதம் நடத்தப்படும். இந்த மாத பரிசு விபரங்களை மேலும் தெரிந்துகொள்ள அணைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.