கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடன் வருகிற 6-ஆம் தேதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் பி .எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தவர் பிரியா. 17 வயதாகும் இவர் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
இச்சூழலில், கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த் நவம்பர் 7-ஆம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனாலும், வலி சரியாகாததால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது வலது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் பிரியா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் ரவிக்குமார் – உஷாராணி தம்பதி தவறான சிகிச்சை அளித்ததே இதற்கு காரணம் என புகார் அளித்தனர். இதன்பேரில், மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் பெரவள்ளூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், மருத்துவர்கள், விசாரணை அதிகாரிகள், துணை கமிஷனர் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவானது வருகிற 6-ஆம் தேதி மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை; வெளிவந்த அதிர்ச்சி தகவல்