சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் மையத்தை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், அங்கு செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார் .
அப்போது அவர் கூறியதாவது :
உலகமே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகிலுள்ள 17 நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இவை பொதுவாக நுண்கதிர் துறையின் மூலம் தான் சாத்தியமாகிறது. மிகச்சிறந்த உபகரணங்கள் மற்றும் சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றும் குழுவால், கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து விதமான ஸ்கேன்களும் இங்கு எடுக்கப்படுகின்றன. நோயாளிகளின் நலம் பேணும் அரசுக்கும், மருத்துவக் கல்வி துறைக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த நுண்கதிர் நிறுவனம் செயல்படவுள்ளது.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுடன் ரூ.178 கோடி செலவில் பிரம்மாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 80 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்குண்டான நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்துக்கு ஒரு செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் எனவும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க இருப்பதால் அது தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளோம்.
சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் சில குறிப்புகளை கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி சில தினங்களில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணை தடுப்பூசியை விரைவாக செலுத்த வரும் 4, 11, 18, 25 ஆகிய நான்கு ஞாயிற்றுகிழமைகளிலும் தொடர்ச்சியாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதத்தின் இறுதிவரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என்றும் அதன் பிறகு அரசு நிர்ணயித்துள்ள 360 ரூபாய் கொடுத்து தனியார் மருத்துவமனையிலேயே செலுத்தி கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
வாட்ச்மேன்களை குறிவைத்து கொல்லும் ‘கல் மனிதன்’ – அச்சத்தில் மக்கள்