தமிழகத்தில் கடந்த ஓராண்டாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியின் ஆட்சியை எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் அடிக்கடி விமர்சித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் சட்டத்தின் ஆட்சியைக் கொடுத்தோம், ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்களை பொறுக்கி, தமிழகத்தில் அரங்கேறும் வன்முறைகளை பொறுக்கி எடுத்து வந்து, மக்களிடையே சமர்ப்பிப்பதால் நான் பொறுக்கி தான் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பா.ஜ.க., சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, “கொடியவர்களுடைய கூடாரமாக, பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பவராகவும், ஊழலை நடத்தி சம்பாதிக்கும் அரசியல்வாதியாக திமுக அரசு மாறியுள்ளது. இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8 ஆண்டுகால ஆட்சி நடைபெற்றுள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீதாவது ஊழல் புகார் எழுந்துள்ளதா என்றால் இல்லவே இல்லை என்பது தான் உண்மை.
தமிழ்நாட்டில் ஓராண்டை நிறைவு செய்துள்ள திமுக ஆட்சியில், ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறி இருப்பதே சாதனையாக உள்ளது. திமுக ஆட்சியைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் உருப்படியான ஆட்சி நடத்த முடியாதவருக்கு, இந்தியாவின் துணைப் பிரதமராக வர வேண்டும் என்கிற ஆசை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எந்தவொரு விஷயத்தையும் உருப்படியாக செய்ய தெரியாத, கையாலாகாத திமுக அரசு, தேசிய கட்சியான பா.ஜ.க. அரசுடன் போட்டியிடுவது என்பது எலிக்கும், யானைக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முழுமையாக 25 எம்பி.,க்களை டில்லிக்கு அனுப்பி வைத்து விட்டால், குறைந்தது 5 அமைச்சர்களை பெறலாம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.
அண்ணாமலை யார் என்று கேட்டால் பெரிய பொறுக்கி என, திமுக அமைச்சரான தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார். உண்மையாகவே திமுக அமைச்சர் கூறிய வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் ஒரு பொறுக்கி தான், ஆனால் நான் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுகவின் ஊழல்கள் அனைத்தையும் பொறுக்கி, வன்முறைகளை பொறுக்கி, திமுக அரசின் அராஜகத்தை சாதாரண மனிதனாக பொறுக்கி எடுத்து வந்து, மக்களிடையே சமர்ப்பிக்கும் பொறுக்கி. இதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால், நல்ல மனதோடு கம்பீரமாக நான் ஏற்றுக் கொள்வேன் என்று அண்ணாமலை பேசினார்.
கிணற்றை மூட வந்த நெடுஞ்சாலைத் துறை: தற்கொலைக்கு முயன்ற விவசாயி!