தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இன்று 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை கொளத்தூர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது.
அதேபோல், தமிழகத்தின் பிற மாவட்டத் தலைநகரங்களில் பாஜக கட்சியின் நிர்வாகிகள் தலைமையில், உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.