பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகரை தாக்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியும் சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் பரஸ்பர தாக்குதல் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது குற்ற அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை நடிகர் மகாகாந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை தடை செய்யக் கோரியும், தன் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்திருந்தார்.
இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற அவதூறு வழக்கின் மீதான விசாரணையை நடத்தலாம் என்றும், அந்த விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், ‘இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணை எல்லைக்குட்பட்டது இல்லை. அதனால், இங்கு வழக்கு தொடர முடியாது’ என தெரிவித்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
இதன்படி, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை