ஆசியக் கோப்பை 2022 இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. முன்னதாக, இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட்-31) இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இந்திய இன்னிங்ஸில் முதல் இரு ஓவர்களில் நிதானம் காட்டிய தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் – கேப்டன் ரோஹித் சர்மா, பிறகு ரன்கள் சேர்க்கத் தொடங்கினர். இருப்பினும், ரோஹித் சர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, விராட் கோலி ஆட்டக்களத்திற்கு வந்தார். இச்சமயத்தில் நிதானமாக ரன்கள் சேர்த்த ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ், கோலியுடன் இணைந்தார்.
கோலி – சூர்யகுமார் பார்ட்னர்ஷிப் ஹாங்காங் பந்துவீச்சை துவம்சம் செய்ய தொடங்கியது என்றே கூற வேண்டும். தொடக்கத்தில் கோலி நிதானம் காட்டினாலும், சூர்யகுமார் அதிரடியாகவே ஆடினார். ஆட்டத்தின் முடிவில் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இருவரின் அதிரடியால் இந்திய அணி இருபது ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. ஹாங்காங் அணித் தரப்பில் பந்துவீச்சாளர்கள் ஆயுஷ் சுக்லா, முகமது கஸான்ஃபர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 193 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடியது ஹாங்காங் அணி. அந்த அணித் தரப்பில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடிக்க, கின்சித் ஷா 30, கேப்டன் நிஸாகத் கான் 10, யாஸிம் முர்டாஸா 9, அய்ஸாஸ் கான் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆட்ட முடிவில், ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹாங்காங் அணி வீரர்கள் ஜீஷான் அலி 26 ரன்களுடனும், ஸ்காட் மெக்கன்ஸி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட வீழ்த்தினர்.
கடந்த சில மாதங்களாகவே சரிவர விளையாடமல் இருந்த விராட் கோலி இந்தப் போட்டியில் அடித்த அரைசதம் அவரின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.