தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும் மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளதால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு – வைகை பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன பகுதி 1,2,3ஐ சேர்ந்த விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கி வைத்து கொள்ள முடியும்.
இதனையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் ஒருவாரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான உத்தரவு ஓரிரு நாட்களில் தமிழக அரசு வழங்கும் என்றும், தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.