உணவு விநியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளதா? என பாமக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
கால்டாக்சி ஓட்டுநர், உணவு விநியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கை திட்டத்தை அரசு வைத்திருக்கிறதா? என அன்புமணி ராமதாஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ‘இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுநர், உணவு விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக’ மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
மேலும், எழுத்து பூர்வமாக பதில் அளித்த மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளதாவது:
2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகளில் முதல் முறையாக ஜிக் பணியாளர்கள் எனப்படும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த வரையறை சேர்க்கப்பட்டுள்ளது.
பணியின்போது உயிரிழப்பு, உடல் நலக் குறைவு ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவம் மற்றும் மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்றவற்றில், பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க 2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வழிவகை செய்கிறது.
இதற்காக, சமூகப் பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும், இந்த விதிகள் வகை செய்கிறது. இத்தகைய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு வருமானத்தில் 1 முதல் 2 சதவீதத் தொகையை, அது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 5 விழுக்காடு மிகாத அளவில், சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிக்க வேண்டும்.
தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யவும், அவர்களை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கவும் இணையதளம் ஒன்றும் 26.08.2021 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்- பாமக நிறுவனர்