ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக தமிழக அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடையை சட்டமசோதாவாக இயற்றி, அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. மேலும் ஆளுநர் இந்தச் அவசர சட்டம் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இதையடுத்து 6 வாரங்கள் ஆகியும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால், சட்ட மசோதா கடந்த 26 ஆம் தேதி காலாவதியானது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னை அடுத்த மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது இறப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் இரங்கல் தெரிவித்ததோடு, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தானி ஓட்டுனரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தடுக்க முடியாததாகி விடும்.
வாழ்க்கையில் முன்னேறும் நோக்கத்துடன் மகளிர் குழுவில் மனைவி கடனாக பெற்று வந்த ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி பார்த்திபன் இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இல்லை.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தை அழிக்கிறது. அதைத் தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றே ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பை; நாக் அவுட் சுற்றில் போலந்து, அசத்திய அர்ஜென்டினா