மராட்டிய மாநிலம் அமராவதியில் மருந்தக உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் என்ஐஏ காவலில் எடுத்துள்ளது.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிர்ந்ததால் மகாராடிரா மாநிலம் அமராவதியில் மருந்தக உரிமையாளர் உமேஷ் பிரஹலாத்ராவ் கடந்த மாதம் 21-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், காவல் துறையினர் 7 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், இந்த ஏழு பேரும் அமாராவதி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து 7 பேரையும் நான்கு நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, 7 பேரும் என்ஐஏ எனப்படும் தேசிய புலானாய்வு முகமை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு இந்த 7 பேரும் ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பு, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி கடந்த மாதம் 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையா லால் என்பவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் துணையின்றி நீதித்துறை இயங்காது – நீதிபதி ஜே.பி.பார்திவாலா!