மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா கட்சியுடனான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அங்கு பயணம் செய்தார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இரண்டு நாள் பயணத்தின் பொழுது, பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்தேகிக்கும் வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார்.
அப்படி வந்திருந்த அந்த நபர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையையும் அணிந்து வந்துள்ளார்.
அமித் ஷாவின் வருகையையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சில நிகழ்ச்சிகளின் போது அமிஷாவுக்கு அருகிலும் அந்த நபர் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமித் ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், இது பற்றிய தகவல் மும்பை காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பை காவல்துறை அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் அவருடைய பெயர் ஹேமந்த் பவார் என்பதும், அவர் ஆந்திராவை சேர்ந்த ஒரு எம்.பி-யின் உதவியாளராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது மும்பை காவல் துறையினர் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும் – அசாம் முதல்வர் கருத்தால் சர்ச்சை!