நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவனம், தயாரிப்பு பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன்படி ஆவின் நிறுவனம் சமீப காலத்திற்கு முன்பு ஐஸ்க்ரீம், தயிர், நெய், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதற்கு பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனிடையே ஆவின் நெய்யின் விலையை மீண்டும் உயர்த்தி அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதே போல் ஒரு லிட்டர் ப்ரீமியம் நெய்யின் விலையை 630 ரூபாயில் இருந்து 680 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும் 5 லிட்டர் நெய் பாட்டிலின் விலை 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய ஆவின் நெய்யின் விலை உயர்வு இன்று (டிசம்பர் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. பால் விலை ஏற்றத்தை தொடர்ந்து ஆவின் நிறுவனம் நெய்யின் விலையை உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு; முதல்வர் ஸ்டாலின்