தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், மூன்று மாவட்டங்களுக்கு தீவிர கணமழையும், 15 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன்படி தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களும் தங்களுக்கு, பேரிடர் மீட்பு வீரர்கள் தேவை என கேட்டுக் கொண்டதை அடுத்து, அரசு சார்பில் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இது போன்ற கனமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில், வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களை மீட்பது அதேபோல், எதிர்பாராத விதமாக நிகழக்கூடிய பாதிப்புகளின் போது மீட்பு நடவடிக்கைகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
இதன் அடிப்படையில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை