பெரியாரின் ஆத்மா ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மன்னிக்காது என அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே சமயம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சமூக சீர்த்திருத்தம் தான் முக்கியம் என தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் தான் பெரியார் எனவும், சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்; எல்லோரும் சமம்; பெண்கள் முன்னேற வேண்டும் என்று எண்ணிய பெரியார் எப்போதும் தேர்தலை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொள்ளும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்து அமைச்சராக இருந்ததாக கூறினார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் தமிழகத்திற்கு காங்கிரஸ் தலைவராக மாறினார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தை பெரியார் ஆத்மா அவரை மன்னிக்காது. பாஜக எங்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்பதில் உண்ணாமை இல்லை. எடப்பாடி பழனிசாமி கூறுவது போல, பாஜகவுடன் தான் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என தம்பிதுரை தெரிவித்தார்.
வசூலில் மாஸ் காட்டும் ஷாருக்கானின் பதான்!