தமிழ்த் திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர், டி.பி.கஜேந்திரன் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
ஆனால், வீடு திரும்பியப் பிறகும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதன் விளைவாக, டி.பி.கஜேந்திரன் (68) நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இவர் 1988-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வீடு மனைவி மக்கள்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு காவல்காரன்’, கார்த்திக் நடித்த பாண்டிய நாட்டுத் தங்கம்’, பிரபு நடித்த’பட்ஜெட் பத்மநாதன்’, ‘சீனா தானா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை கஜேந்திரன் இயக்கியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கல்லூரி வகுப்புத் தோழரான டி.பி.கஜேந்திரன், ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவரின் மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட திரையுலகினரும் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இலவச புடவை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு