தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரையில் ‘மெட்ராஸ்-ஐ’ பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ் – ஐ’ என்பது விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று. இந்தத் தொற்று காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். மேலும், ‘மெட்ராஸ்-ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மெட்ராஸ்-ஐ பரவல் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ்-ஐ குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, அவர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து மெட்ராஸ்-ஐ கண் பாதிப்பு கூடுதலாகி வருகிறது. சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்கள் இருக்கிறது. இந்த 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 -100 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள்.’ என்று தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், ‘தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். இதுவரையும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரையில் மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிமாக உள்ளது.’ என்று தெரிவித்தார்.
மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டோர், கண்களை கையினால் தொடக்கூடாது அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும், இது எளிதில் பரவக்கூடிய நோய் பாதிப்பாகும் எனவே நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர்.