வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குனரின் பங்கு குறித்த சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.காவாய் மற்றும் பி.வி நாகரத்தினா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது சுப்பிரமணியசாமி முன்னின்று, “வங்கி முறைகேடுகள் தொடர்புடைய கடன்களை வழங்கியதில் பங்கு வகித்த ரிசர்வ் வங்கியின் அனைத்து இயக்குனர்களையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்” என வாதாடினார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, தனிபட்ட நபரின் பங்கை சி.பி.ஐ. கண்டறியாதபோது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியசாமி,
ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் நியமிக்கப்பட்டவர்கள். சாதாரண நபர்கள் இல்லை. கடன் பரிசீலனை குழுவுக்கு தலைமை ஏற்றவர்கள். அதன்படி, ரிசர்வ் வங்கி போர்டின் முழுமையான உறுப்பினர்கள்.
அதனால், பிற இயக்குனர்கள் குற்றமுடைவர்கள் என்றால், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியையும் விசாரிக்க வேண்டும். பிற இயக்குனர்களைப் போல் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளையும் விசாரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமையை மீறுவது. கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித விசாரணையும் முடிவுக்கு வரவில்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து, வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சமர்ப்பிக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை; அடுத்த நகர்வு என்ன?