2023-ம் ஆண்டு மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவித முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை முன்னெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு செய்தது.
இந்நிலையில், தற்போது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான தகவல்களை பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி, மகளிர் ஐபிஎல் தொடரானது அடுத்த வருடம் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: அதிகம் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? கவனம் தேவை…விழித்துக்கொள்ளுங்கள்…!
மேலும், மகளிர் ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் 5 அணிகள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 18 வீராங்கனைகள் சேர்க்கப்படுவர். அதில் 6 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவர். அதுவே பிளேயிங் லெவனில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த 5 பேரில் நால்வர் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக இருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் துணை உறுப்பினர் நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் 2 ஆட்டங்களில் மோதும் வகையில் 20 லீக் ஆட்டங்கள் விளையாடப்படும். அதன் முடிவில் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும். 2 மற்றும் 3-ம் இடம் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக எலிமினேட்டரில் மோதும். இந்த தொடரின் போட்டிகள் ஒரு சீசனில் இரு இடங்களைத் தேர்வு செய்து அவற்றில் தலா 10 ஆட்டங்கள் என்ற வகையில் நடத்தப்படும்.