ராகுல் காந்தி இந்தியாவுடன் பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என அசாம் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். இவரின் இந்த பயணத்திற்கு பா.ஜ.க பல கருத்துகளை முன்வைத்து வருகிறது.
அந்த வகையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அப்போது பாரத் ஜோடோ யாத்திரை குறித்து இவர் கூறியதாவது;
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த நூற்றாண்டுக்கான வேடிக்கை. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், இந்தியா ஒரே நாடு அது ஒன்றுபட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே நாடாக இந்தியா ஒன்றுபட்டுள்ளது. ஆகவே ஒருங்கிணைப்பு யாத்திரைக்கு அவசியமில்லை.
மேலும், 1947-ம் ஆண்டு பாகிஸ்தானை உருவாக்குவதற்காக இங்கு பிரிவினை ஏற்பட்டது. அதன்பின்னர், வங்காளதேசமும் உருவானது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு தனது மூதாதையர் உருவாக்கிய பிரச்சினையால் வருத்தம் இருந்தாலோ, மன்னிப்பு கேட்க விரும்பினாலோ அவர் பிளவுபடாத இந்தியாவை உருவாக்குவதற்கு அதாவது இந்தியாவுடன் பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.