கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்கு பின், கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. மேலும், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த எஸ்டேட்டில் இருந்த பல ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு குறித்து, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது உறவினர் உள்பட கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.
இதைத்தொர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றதில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க ,உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கு தீவிர விசாரணையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர், மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது என்றும், நீதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, வழக்கின் விசாரணையின் நிலை என்னவென்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வருகிற செப்டம்பர் 16-ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.