அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அனுமதி அளித்திருந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நான்கு மாதங்களுக்கு அப்பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது. நிரந்தர பொதுச் செயலாளருக்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டைகளை வைத்தும் கற்களை வீசி எரிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலால் உருவாகியுள்ள பதற்றத்தைத் தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி