மேட்டூர் அணையின் நீர்மட்டம் பல நாள்களுக்கு பிறகு, 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. அதிக நீர்வரத்து காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, பருவமழை காரணமாக நவம்பர் 13-ம் தேதி மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகு, பருவமழை குறைந்ததாலும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும், டிசம்பர் 25-ம் தேதி முதல் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
ஜனவரி 28-ம் தேதி பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதோடு, குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் இருந்து வந்தது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் போதுமானதாக இருந்ததால், விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே குறுவை சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
பாசனத்திற்காக, காவிரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டமும், பருவமழையும் குறைந்த காரணத்தால் நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை 7) அணையின் நீர்மட்டம் 257 நாள்களுக்கு பிறகு, 100 அடிக்கும் கீழே குறைந்துள்ளது.
இன்று, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.59 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,107 கன அடி வீதம் நீர் வந்துக்கொண்டிருந்தது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 64.31 டி.எம்.சியாக உள்ளது.