இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாம் ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி ஒரு நாள் போட்டித் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இன்று இந்தியா வெற்றிப்பெற்றால், ஒரு நாள் தொடரையும் இந்தியா வென்றுவிடும். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களம் கண்டது. அதன்படியே, டாஸூம் அவர்கள் பக்கம் விழ, மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது, இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷப் பண்ட்டும் களமிறங்க, 5 ரன்களில் ரோகித் தனது விக்கெட்டை பறிகொடுக்க, ரிஷப் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி 18 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார்.
இதன் பின்பு இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கே எல் ராகுல் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கியது. 49 ரன்களில் கே எல் ராகுலும், 64 ரன்களில் சூர்யகுமார் யாதவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வாஷிங்டன் சுந்தரும், தீபக் ஹூடாவும் தங்கள் பங்கிற்கு 24, 29 என ரன்களை சேர்க்க இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை மட்டுமே சேர்த்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது பேட்டிங்கை தொடங்க இருக்கிறது.