தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
எஸ்கே 20 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படமாக இருக்கும். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இதனை எடுக்கின்றனர். டூரிஸ்ட் கைடாக இருக்கும் ஒரு இளைஞன் வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணிடம் காதல் கொள்வதே இந்தப் படத்தின் கதை என கூறப்படுகிறது.
இப்படத்தை இயக்குநர் அனுதீப் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரிய ரிஷபோப்ஸ்கா நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக காரைக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் சத்யராஜும், பிரேம்ஜியும் நடிப்பது உறுதியாகி உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்போது மீண்டும் அவர் இந்தப் படத்தில் இணைகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப் போல இந்தப் படமும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். நாராயன் தாஸ் கே நரங், சுரேஷ் பாபு, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!