தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து நடிகர் வையாபுரி விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
அப்போது அதிமுக கூட்டணியை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி மாவட்டம், போடி புதூர் பகுதியில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தப்பட்டதாகவும், வையாபுரி அங்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் பணம் வைத்து கொடுத்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தல் விதிமுறை மீறலுக்காக, போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், போடி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவினால் வழக்கும் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.
இதனிடையே நீதிமன்றத்திலிருந்து சமன் அனுப்பியும், நடிகர் வையாபுரி ஆஜராகாமலே இருந்து வந்தார் இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக போடி நீதிமன்றம் வையாபுரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை அடுத்து, வையாபுரி போடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக ஆஜராகி, பின்பு ஜாமீன் வழங்கப்பட்டு சென்னை திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் வையாபுரி ஆஜரானார்.
மேலும், அவர் மீது குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்ய குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அமித் ஷா உயிருக்கு அச்சுறுத்தல் ? மாறுவேடத்தில் ‘ஆபீஸர்’ போல் வந்த நபர் கைது