கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் பதற்றத்தின் காரணமாக, கடந்த ஞாயிறு(ஜூலை 17) முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவிதான், ஸ்ரீமதி. இவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள்.
மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி அதிகாலை, தான் தங்கிப்படித்த பள்ளியின் விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
பள்ளித்தரப்பில், மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். மேலும், காவல்நிலையத்தில் புகார் ஸ்ரீமதி பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மகளின் உடலை வாங்காமல் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, கடந்த ஞாயிறு உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது உயிர் பிரிந்து இருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மக்கள் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அந்நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென காலை 11 மணியளவில் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர். அந்நேரத்தில் இருந்து இப்போரட்டமானது வன்முறையாக உருவெடுத்தது.
அப்போது, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த போராட்டம் திடீரென வன்முறையாக உருமாறியது. இதனை கட்டுக்குள் கொண்டுவர கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அதிரடிப்படையினர் பெரும் போராட்டத்துக்கு பிறகு கலைத்தனர். மேலும், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறையினர் கொண்டு வந்தனர்.
இதனிடையே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்க விவகாரம் தொடர்பாக, மாணவி பயின்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், இம்மாத இறுதிவரை கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறை – ஆசிரியர்கள் கைது