Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்1,000 கோடியில் பசுமை நிதியம் உருவாக்க நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின்

    1,000 கோடியில் பசுமை நிதியம் உருவாக்க நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின்

    தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் Green Climate Fund – பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர், தனியார் ஓட்டலில்,
    சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022-ல், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,

    பெங்களூர், சென்னை மட்டுமல்ல; உலக அளவில் பல பெருநகரங்களில் ஏற்படும் வெள்ளம் தெலங்கானாவில், உத்தராகண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கேரளாவில் ஏற்படும் நிலச்சரிவுகள்- என எல்லாப் பக்கமும் நாம் பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.வளிமண்டத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக,  புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.  இதன் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம். இவை நமக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை! காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.

    கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் (Glasgow) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் அவர்கள்,  “இந்தியா வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலையை எட்டிவிடும்” என்று அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது.

    கடந்த ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
    துறையின் பெயரை “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று அறிவித்தோம்.தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம்.

    நிதிநிலை அறிக்கையில் அதற்கென  500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்.
    தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை  21 விழுக்காட்டில் இருந்து  33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் நான் துவக்கி வைத்தேன்.

    இதுவரை சுமார்  2.8 கோடி மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.
    பொதுவாகவே வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையை, பருவங்களை கணிப்பது கடினம்.  இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் “காலநிலை ஸ்டூடியோ” ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும்  10 கோடி ரூபாயை  ஒதுக்கி,  திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
    ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கு திட்டம் இன்று துவக்கப்படுகிறது.காலநிலை மாற்றம் குறித்து பள்ளி – கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க “காலநிலை அறிவு இயக்கத்தை” (Climate literacy) தமிழகத்தில் செயல்படுத்தப்போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.பல்லுயிரியத்தைப் பாதுகாப்பதை இந்த அரசினுடைய முக்கியமான கடமையாகக் கருதுகிறோம்.

    கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13 ஆக உயர்த்தியுள்ளோம். அருகிவரும் உயிரினங்களான கடல்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக “Tamil Nadu Green Climate Company” உருவாக்கப்பட்டு இவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான குறியீடாக “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
    இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள,  “காலநிலை மாற்ற நிர்வாகக் குழு” எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

    இந்நிலையில் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகள்,

    1. “பசுமைத் திட்டங்களுக்கான” அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில்,  தொழில்துறையில் உள்ள Guidance TN-ஆல் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த முடிவு 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.

    2.  புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் (Green Corridor) உருவாக்கப்படும்.

    3.  காற்றாலைகளைப்  புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை (Re-Powering Policy) எரிசக்தித் துறையால் வெளியிடப்படும்.

    4.  அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்தவிருக்கிறோம்.

    5. தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் Green Climate Fund – பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்கட்டமாக,  நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

    6. காலநிலை மாறுபாடு,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,  சுழற்சிப் பொருளாதாரம்,  வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.
    தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல,  சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    வளர்ச்சி – தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை!

    இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள
    2070- ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....