“10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.
இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூக நீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூக நீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து கூறி வரும் இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க: எந்த குழப்பமும் இல்லை.. அதிமுக தலைமையில் தான் கூட்டணி – பாஜக அண்ணாமலை