2024-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் தற்போது 2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய உலகக் கோப்பைத்தொடரில் 12 அணிகள் மட்டுமே பங்கேற்றது. மேலும், அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கோப்பை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
முதன் முறையாக தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றிருப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல, போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன.
இந்த 10 அணிகளுடன் ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. 12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே அணியை பொட்டலம் கட்டி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா..