இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததன் காரணமாக நேற்றைய ஆட்டம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. அதனால் இருபது ஓவர்கள், எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. ஆரோன் ஃபின்ச் மற்றும் மேத்யூ வேட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்களுக்கு 90 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விளையாட உள்ள சி.எஸ்.கே – பிசிசிஐ தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
இதையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஒருபுறம் ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட மருபுறம் கோலி, சூர்யகுமார் யாதவ், பாண்டியா விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் முனையில் தினேஷ் கார்த்திக்கும் மறுமுனையில் ரோஹித் சர்மாவும் இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் சாம்ஸ் வீசிய முதல் பந்தில் சிக்சரையும், இரண்டாவது பந்தில் பவுண்டரியையும் அடித்தும் இந்தியாவின் வெற்றியை தினேஷ் கார்த்திக் உறுதிப்படுத்தினார்.
ஆட்டநாயகன் விருது 20 பந்துகளுக்கு 46 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.