தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனாவின் கணவரும், தொழிலதிபரான வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 48.
நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில் வித்யாசாகருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் தடங்கல் ஏற்பட்டது. தீவிரமான உடல்நலக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழக்கத் தொடங்கியது.
இதனையடுத்து சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஜூன் 28) இரவு ஏழு மணியளவில் வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் இரண்டு மணிக்கு சென்னையிலுள்ள பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது.
வித்யாசாகரின் மறைவினையடுத்து தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகினரும் தங்களது இரங்கலினை சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் தெரிவித்து வருகின்றனர்.
‘மீனாவின் கணவர் வித்யாசாகரது மறைவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வித்யாசாகரின் ஆத்மா சாந்தியடையட்டும்.’ என்று நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது போல தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நடிகை மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பு ஆகியோரும் தங்களது இரங்கலினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
நுரையீரல் செயலிழப்பினால் வித்யாசாகர் உயிரிழந்தாலும், அவரது மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிறகே அவரது உடல் நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது.
நடிகை மீனா-வித்யாசாகர் ஆகியோரின் திருமணம் 2009ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நைனிகா என்னும் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
போராடி வென்ற இந்தியா.. அதிரடி காட்டிய அயர்லாந்து..