தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் -29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், சிகிச்சைகள் தொடர்பாக விசாரணை செய்ய நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை அண்மையில் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், வி.கே.சசிகலா, டாக்டர் சிவகுமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை கடந்த மே 18-ம் தேதி அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட 4 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆணையம் பரிந்துரைகளைச் செய்துள்ளது.
இந்த பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளன. இதுகுறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. ஆணைய பரிந்துரைகள் குறித்து உரிய தகுந்த நடவடிக்கை எடுத்த பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் இறுதி அறிக்கை பேரவையில் விவாதத்துக்கு வைக்கப்படும்.
இந்தப் பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்பு, உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் விவாதத்துக்கு வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.