முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சியில் இரட்டைத் தலைமை என்ற சூழல் தான் நிலவி வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றனர்.
இதில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கட்சியின் எந்த முடிவானாலும் உடனடியாக எடுக்க முடியாமல் போகிறது. இரட்டைத் தலைமையால் தான் இந்த நிலை. ஆகையால் கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டியது அவசியம்.
முன்பிருந்தபடி, அதிமுகவில் ‘பொதுச் செயலாளர்’ என்கிற பதவியைக் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் மெனக்கட்டு வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் விரைவில் கூடவிருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் 23 ஆம் தேதி, சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்கப் போகிறார் என அவருடைய ஆதரவாளர் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஓ. பன்னீர்செல்வம் சொந்த ஊரிலேயே இந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் வீட்டிற்கு அருகேயும் இந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். இதனால் பன்னீர்செல்வமும், அவருடைய ஆதரவாளர்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர் என்கிறார்கள் பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுகவினர்.
ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகிலுள்ள தென்கரை பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் வீடு செல்லும் சாலை மற்றும் தேனி எம்.பி. இரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில், விரைவாகவே, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் இருவரிடையே, அதிமுக தலைமை அதிகாரப் போட்டி இருக்கும் சூழலில், ஓபிஎஸ் வீடு அருகிலேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது அப்பகுதியில் மட்டுமல்லாது, அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலா; என்ன நடக்கப்போகிறது?